2010-10-02

கொட்டும் மழையிலும் புரட்டாதிச்சனி

சனீஸ்வரன், இருக்கிற ஒன்பது (நவ )கிரகங்களில் கொஞ்சம் பிரபல்யமானவர். ஒருவரது வாழ்க்கையில் இந்த சனியின் ஆக்கிரமிப்பு எப்படியும்  இருந்தே ஆகும்.


குறிப்பாக பிறக்கும் நட்சத்திரத்தில் தோஷம்( 4 இல் சனி ,  7 இல் சனி ...)  , இதை விட பிறக்கும் போது சனி - பகை யாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் சனியை வழிபாடு செய்வார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் எள்ளு எண்ணெய் எரித்து வழிபடுவார்கள். சிலர் விரதமும் இருப்பார்கள். இது வாழ்க்கை முழுக்க செய்ய வேண்டி இருக்கும். என்ன கொடுமை சனியன் இது.


இதை விட,  சனிப்பெயர்ச்சி நடைபெறும் போது , பெரும்பாலும் ஏழரைச்சனியன் , சனி எட்டாம் இடத்தில் வரும் போது அட்டமத்து சனியன் என்று ஒவ்வொருவரும் இந்த இரண்டையும்  தங்கள் வாழ்கையில் எப்படியும் சந்தித்தே ஆக  வேண்டி இருக்கும்.


ஏழரைச்சனியன்-  வந்துவிட்டால் ஏழரை ஆண்டுகள் சனியன் தான். பெரும்பாலும் O/L , A/L படிக்கும் போது பலருக்கு ஆப்பு வைக்க என்று வரும். ஒரு சிலர்  இதெல்லாம் தப்பி வந்தாலும், இருபதுகளில் வந்தால் திருமண தடை, குடும்பத்தில் பிரச்சினை , செலவு,உடல் நோய் , உடல் மெலிவு  என்று எல்லாம் போட்டு தாக்கும் பலம் கொண்டவர் இவர்.

ஏழரை ஆண்டை, ஒவ்வொரு இரண்டரை ஆண்டாக பிரித்து,  இடங்கள் மாறும்போது, அல்லது வக்கரிக்கும் போது , அவரவருக்கு நல்ல மற்றும் கெட்ட பலனை குடுப்பார் இந்த சனியன். அதால தான் சனம் சொல்லுறதுகள், ஆரம்பத்தில கஷ்டமும் பிறகு நல்லதையும் அல்லது முதலில் நல்லதும் பிறகு கஷ்டத்தையும் குடுப்பார் என்று.
சிலருக்கு ஏழரை ஆண்டும் கஷ்டம் தான்.
சொன்னால் போல , எனக்கு A/L  படிக்க தொடங்கும் போது, அதாவது  1995 இல் வந்த சனியன் பல்கலையில் மூன்றாம் ஆண்டு முடிக்கும் மட்டும் தொடர் ஆப்பு தான்.  பல்கலை செல்ல வைத்தது ஒன்றை தவிர மற்றது எல்லாம் பெரிய ஆப்பு தான். அடிக்கடி குளிரால்  உடல் சுகவீனம், செலவு , எல்லாத்திலும் வெறுப்பு என்று எல்லாம் வந்து ஆட்டி படைத்தது விட்டு போனது.


ஒரு ராசியில் சராசரியாக 2 1/2 வருடங்கள் சஞ்சரிக்கும் சனி பகவான், 12 ராசிகளையும் (அதாவது சூரிய பகவானை) சுற்றி வர சராசரியாக இருபத்தொன்பதரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.


ஒருவரின் வாழ்கையில் ஏழரைச்  சனியன் மூன்று தடவைகள் வரும் என்பது ஐவீகம். முதல் ஏழரை நாட்டுச் சனி சஞ்சாரத்தை "மங்கு சனி' என்றும், இரண்டாம் சுற்றுக்குப் "பொங்கு சனி' என்றும், மூன்றாம் சுற்றுக்கு "மரண சனி' என்றும் பெயர் வைத்து அழைக்கிறார்கள். இதற்காக மூன்றாவது சுற்று ஏழரைச் சனி நடப்பவர்கள் அனைவருமே இறந்துவிடுவார்கள் என நினைப்பது பேதமை.  எனக்கு தெரிந்த பலர் மரண சனியில் மண்டையை போட்டும் உள்ளனர். இன்னும் சிலர் இன்னமும் வாழ்கின்றனர். இதுக்கு எல்லாம் விளக்கம் சொல்ல நான் கடவுள் இல்லை. 

 வாழ்கையின் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல பொங்கு சனி கூடுதலாக உதவுவார் என்று சொல்லும் வழமையும் உள்ளது.




அட்டமத்து சனியன்: னியன் எட்டாம் இடத்துக்கு வரும் போது வருவது தான் இந்த சனியன். இவர் பெரும்பாலும் பெரிய ஆப்பை தான் போடுவார். எல்லாம் நன்மைக்கே என்று கொள்ள வேண்டியது தான். அதுவும் பிறப்பில் சனி தோஷம் இருக்கிறவைக்கு தொடர்  ஆப்பு தான். 

இவ்வளவும்  எழுதுறது என்னுடைய , நண்பர்களின் அனுபவங்களில் தான். 

இப்படிப்பட்ட பெரிய வில்லன் சனீஸ்வரனை நாங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிபட்டால் மிகவும் நல்லது. 

இப்படித்தான் சனியை வர்ணிப்பர் "குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?', சனியன் குடுத்தால் குடுத்து கொண்டே இருப்பார். எங்கட பாசையில் வஞ்சகமில்லாமல் குடுப்பார்.

சனீஸ்வரனை  நோக்கி பாடும் தோத்திரம் இதுதான்.

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா! தா!

புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில், அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும்,  சிவன் அல்லது விஷ்ணு ஆலயத்தில் உள்ள நவக்கிரகங்களுக்கு எள்ளு எண்ணெய் எரித்து ,அர்ச்சனை  செய்து வழிபட்டால் சனீஸ்வரனின் கொடுமை குறையும் என்பது வரலாறு. 

இது குறிஞ்சிக்குமரன் கும்பாபிஷேகம் நேரம் , விக்கிரகங்களை பிரட்டும் போது சனியை பிரட்டி தர தூக்கிட்டு போனது. :)

சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். அடுத்தமுறை போகும் போது கொஞ்சம் உத்து பாருங்க. வடிவா தெரியும். சனீஸ்வரன் சூரியனுக்கு பின்னால் இருப்பவர். சொன்னால் போல சூரியன் நடுவில இருப்பார். குறிப்பாக கறுப்பாடை அணிந்து செல்லுதல் வழமை. எல்லாமே பழசுகள் சொன்னது. 


 இதிலும் புரட்டாதியில் நவராத்திரி வருவதால், நவராத்திரி காலங்களில் வரும் சனிக்கிழமைகளில்  எள்ளு எண்ணெய் எரித்தல் கூடாது. வீடுகளில் கும்பம் வைப்பதால் அது தடை.  இந்த முறையும் வருகின்ற வெள்ளிக்கிழமை நவராத்திரி தொடங்குவதால் அடுத்த சனிக்கிழமை எள்ளெண்ணை எரிக்க பலர் விரும்ப மாட்டார்கள். ஆதலால்,  இந்த சனிக்கிழமை தான் கடைசிக் கிழமை ( புரட்டாதி சனி  ). 

 

கோவில் எல்லாம் சனமோ சனம். ஊரோடு எல்லாமே வந்துட்டுதுகள். சனியன் கன பேருக்கு இருக்கு என்று தெரிந்து கொண்டேன் இன்று. அவரவர் வந்து எரித்தால் தான் அவரவர் அப்பலனை பெறுவார்கள் . இதுவும் வரலாறு. அதால வீடுகளில்  உள்ள பழசுகள், இளசுகள் , பிகர்கள் என்று கோவில் நிரம்பி வழிந்தது .

தம்பி இவ்வளவும் பேசுறீர், நீர் என்ன ம.................... அங்க போனனீர் என்று கேட்பியள் ; எனக்கு தெரியும் .

காரணம் 1 : ஏழரைச்சனியன் எனக்கு இருந்த காலத்தில் ஒவ்வொரு சனியும் நான் கோவிலுக்கு போய் சனீஸ்வரனை வழிபடல் வழமை.  முடிஞ்ச பிறகும் அதை தொடர்ந்தேன். சனிக்கிழமை மரக்கறி உண்ணும் நாள் !!!

 காரணம் 2 : கொழும்புக்கு வெளியே வேலை செய்வதால், அந்தப்பகுதியில்  கோவில் செல்லும் வழமை குறைவு.  இடைக்கிடை செவ்வாய்க்கிழமைகளில் சென்று வருவேன்.  வார இறுதி நாட்களில், கொழும்பில்,  நண்பர்களுடன் சேர்ந்து, பெரும்பாலும் சனி காலை கோவில் செல்வது வழமை.  அதுவும் கதிரேசன் கோவில்தான்.

 காரணம் 3 : அம்மா, கொழும்பில் பொன்னம்பலவானேஸ்வரம் கோவில் மட்டும் சென்று வழிபடுபவர். மற்ற கோவில்களுக்கு போறது இல்லை. இது எல்லாத்துக்கும்  சேர்த்து நான் தான் போறது. 

 

 சரி  விஷயத்துக்கு வருவம். இன்று எள்ளு எண்ணெய் எரிக்க சட்டி வாங்க ஒரு பெரிய வரிசை. கொட்டும் மழையோ மழை. இடி முழக்கம் , மின்னல் வேறு. எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு சனம் நீண்ட வரிசையில்.  நீண்ட நேரம் நின்று ஒருமாதிரி கவுண்டருக்கு கிட்ட போயாச்சு. எனக்கு முன்னுக்கு, ஒரு ஐம்பது வயசு மதிக்க தக்க அம்மா ஒருவ நின்றவ. அவ கவுண்டரில் நிண்ட தம்பியிட்ட, தம்பி எனக்கு ஒரேடியா ஐஞ்சு சட்டி  எரிக்கனும். பிள்ளை குட்டிகள் எல்லாம் வகுப்புகளுக்கு போட்டுது. மனிசன் வேலைக்கு போட்டார். அதால நான்தான் வந்து இருக்கன் என்று சொல்லி,       30* 5  பெறுமதியான சட்டிகளை வாங்கி கொண்டு போனவ. பின்னால நின்ற என்னை பார்த்து தம்பி உமக்கு எத்தனை சட்டி , .. எனக்கு ஒரு சட்டி போதும் என்று விழுந்தடிச்சு சொல்லி,  வாங்கி எரித்து போட்டு வந்தேன். சில பேர் ஒரேடியா பல சட்டிகளை எரித்தா, கூட அருள் புரிவார் சனீஸ்வரன் என்று நினைத்தார்களோ தெரியாது. ஒரு தட்டில் பத்து பதினைஞ்சு என்றெல்லாம் ஏற்றி எரித்ததை காணக்கூடியதாக இருந்தது.

சந்தேகம் :உதில இந்த முறை சனியன் பிடிச்சு நிக்குறவை, கோவில் பக்கம்  இனி அடுத்த வருஷம் புரட்டாதி சனிக்கோ , அல்லது இப்போதைக்கு இனி கோவில் பக்கம் வாறது இல்லையோ,

கடமைக்கு எரிப்பவர்களும் உள்ளார்கள் !!!

இது  எல்லாமே சனீஸ்வரனுக்கு தான் வெளிச்சம். !!!



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...